கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.

 கலைத்திட்ட மேம்பாட்டின் இன்றைய தேவை

மேம்பாடு என்பது, ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு விடயத்தின் செயல்திறன் மற்றும் நிலைத்த தன்மையை அதிகரிக்க திட்டமிடப்பட்ட நிறுவன வாரியான முயற்சியாகும். அதாவது இது ஒரு சிக்கலான கல்வி உத்தியாகும். உண்மைகள், மனப்பாங்குகள், மதிப்புகள் மற்றும் நிறுவன கட்டமைப்பு ஆகியவற்றை மாற்றும் நோக்குடையதாக மேம்பாடு உள்ளது. இத்தகைய மேம்பாடு சகல விடயங்களிலும் காணப்படுகிறது. அந்தவகையில் கலைத்திட்டத்திலும் இது முக்கியமானதாக உள்ளது. கலைத்திட்டம் என்பது, பாடசாலைகளின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்கள் அனைத்து அனுபவங்களையும் கற்பதே கலைத்திட்டமாகும். இத்தகைய கலைத்திட்டத்தில் இடம்பெறும் மேன்மைகள் மாற்றங்கள் அனைத்தையும் கலைத்திட்ட மேம்பாடு எனலாம். மேலும் கலைத்திட்டத்தின் மேம்பாடு என்பது கலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்முறையாகும். எனவும் குறிப்பிடலாம்.



கலைத்திட்டம், கல்வி செயல்முறையின் இதயமாகும். கல்வியும் கலைத்திட்டமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். கல்வி செயல்முறையாக இருக்கும் சமயத்தில் கலைத்திட்டம் அந்த செயல்முறைக்கான வழியாக அமைகிறது. கல்வி கற்றலைக் குறிக்கிறது. கலைத்திட்டம் கற்றலுக்கான சூழ்நிலைகளைக் குறிக்கிறது. கல்வி எவ்வாறு, எப்படி, என்பதைப்பற்றி விவாதிக்கிறது. கலைத்திட்டமானது என்ன என்பதைப்பற்றி விவாதிக்கிறது. கல்வி விளைபொருளாக இருக்கும் அதேவேளையில் கலைத்திட்டம் வரைவாக இருக்கிறது. கலைத்திட்டம் கல்வியின் சுழலச்சாக அமைகிறது. இந்த சுழலச்சினை சுற்றிதான் வகுப்பறைச் செயல்களும் கல்வி நிகழ்ச்சி நிரல்களும் வடிவமைக்கப்படுகின்றன.


கலைத்திட்டம் எக்காலத்திற்கும் பொருந்துவதல்ல. அது மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் இடமளிக்கும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாகும். திட்டமிட்டு கலைத்திட்டத்தை உருவாக்கித் தொடர்ந்து மேம்படுத்துதல் என்பதை கலைத்திட்ட வளர்ச்சி எனலாம். கலைத்திட்டம் சில ஆண்டுகளுக்கொரு முறை பரிசீலிக்கப்பட்டு, தேவையான மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவது நடைமுறையிலுள்ளது. கலைத்திட்ட மேம்பாடு என்பது நன்கு திருத்தியமைக்க உதவும் தொடர் செயற்பாடாகும்.


மேலும் கலைத்திட்ட மேம்பாடு ஒரு திட்டமிடப்பட்ட நோக்கத்துடன் கூடிய தொடர்ச்சியான மற்றும் அமைப்பு அடிப்படையிலான தொடர் செயற்பாடாகும். கலைத்திட்டத்தை மாற்றியமைத்து மேம்படுத்தல் என்பது ஒரு இன்றியமையாத தொடர் செயலாகும். கலைத்திட்டத்தை வளப்படுத்தி வளர்ச்சியுறச் செய்தல் என்னும் செயல், தானே நிகழ்வதில்லை. பல்வேறு தரப்பினரது உதவிகள் மற்றும் முயற்ச்சிகள் தேவைப்படுகின்றன. கலைத்திட்ட மேம்பாடு என்பது, தனி மனிதர்கள் (மாணவர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என்னும் அனைத்து பிரிவையும் சேர்ந்த) குழுக்கள் (Group of People) நிறுவனங்கள் (Orgamisations), ஆகிய பல்வேறு பிரிவினரிடையேயும் ஏற்படும் வளர்ச்சியின் விளைவினால் ஏற்படுவதாகும்.


கலைத்திட்ட மேம்பாட்டின் ஊடாக கல்வி அமைப்பு மேம்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள அறிவுசார்ந்த பொருளாதாரத்தில் கலைத்திட்ட மேம்பாடு ஒரு இன்றியமையாத முக்கிய பங்கினை வகிக்கின்றது. அவ்வாறே உலகிலுள்ள பிரச்சினைகளின் அழுத்தங்களை தீர்ப்பதற்கான விடைகளையும் இது தருகின்றது. கற்போரின் சுதந்திரமான சிந்தனையையும், தொடங்காற்றலையும், தன்னம்பிக்கையையும், தனித்தன்மையையும், தனிவெளிப்பாட்டையும் மற்றும் சுயமான செயல்பாட்டையும் உருவாக்குவதற்கு கலைத்திட்ட மேம்பாட்டின் நோக்கத்தை மிளாய்வு செய்தலும் மற்றும் கற்றல் கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்தலும் கட்டாயத் தேவைகளாக இருக்கின்றன.


கலைத்திட்ட மேம்பாட்டிற்கான அடிப்படைக் கொள்கைகள்


பொதுவாக, கலைத்திட்ட மேம்பாட்டிற்குரிய அடிப்படைக் கொள்கைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. பாடசாலைகளின் நோக்கத்தின் அடிப்படையிலான கொள்கை

2. கல்விசார்ந்த அனுபவங்களின் அடிப்படையிலான கொள்கை

3. கல்விசார் அனுபவங்களை ஒருங்கிணைத்தல் கொள்கை

4. கல்விசார் அனுபவங்களை மதிப்பிடுதல்சார் கொள்கை


அவ்வாறே கலைத்திட்ட மேம்பாட்டின் படிநிலைகளாக, சூழலைப் பகுத்தாய்தல், நோக்கங்களைத் தெரிவு செய்தல், கற்றல் அனுபவங்களைத் தெரிந்தெடுத்தல் என்பனவுள்ளன.


அன்றாட வாழ்வியல் தேவைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதற்கேற்ப கல்வியும் மாற்றமடைகிறது. எனவே கலைத்திட்டம் எவ்வளவு தான் சிறப்புடையதாயிருந்தாலும் அதனை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாது. மாறிவரும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பாக பாடத்துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப, பாடப்பொருள்களும் அவ்வப்போது தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே நன்கு திட்டமிட்டு மாணவர் தேவைகள், சமூகத் தேவைகள் மற்றும் பாடத்துறைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு பாடப்பொருளை தெரிவு செய்வதோடு. அவற்றை உளவியல் அடிப்படையில் வரிசைக்கிரமக ஒழுங்குற அமைத்திட வேண்டும்.


கலைத்திட்டத்திடமானது மேம்படுத்தப்படல் வேண்டும் என்பதற்கான தேவைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.


1. கல்விக்கான இலக்குகள் தொடர்ச்சியாக மாறுபடுவதால் கலைத்திட்டத்தினை மேம்படுத்துதல் அவசியமாகின்றது. அதாவது காலத்திற்கு காலம் கல்விக்கான இலக்குகள் மாறுகின்றன இதற்கு ஏற்றவாறு கலைத்திட்டத்தினை மேம்படுத்தப்படல் வேண்டும்.

2. சமூகத்தின் தேவைகளுக்கான மாறுதலுக்கேற்ப இது தேவைப்படுகின்றது. உதாணரமாக தற்போது தொழிநுட்பம் இன்றி மக்கள் வாழ முடியாத நிலை உள்ளது இதற்கு ஏற்றவாறு கலைத்திட்டத்தினை மேம்படுத்தப்படல் வேண்டும்.

3. உலகமயமாக்கலின் அத்தியாவசியத்தைக் கருத்தில் கொண்டு கலைத்திட்ட மேம்பாட்டின் தேவையை உணரலாம். அதாவது சகல துறைகளிலும் உலகமயமாக்கம் உலகம் பூராகவும் இடம்பெற்று வருகிறது இதற்கு அமைய கல்வியும் தன்னை அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.

4. கல்வித்தொழில், சட்டவியலில் ஏற்பட்டுள்ள கண்டுபிடிப்புக்கள் காரணமாக இது தேவைப்படுகிறது.

5. குழந்தை மையக் கலைத்திட்டம் காரணமாக கலைத்திட்ட மேம்பாடு அவசியமாகின்றது.

6. கல்வியில் ஜனநாயகம் காரணமாக இதன் தேவை மிக அவசியமாகின்றது.

7. அறிவுசார் பொருளாதாரம் காரணமாக கலைத்திட்ட மேம்பாடு அவசியமாகின்றது.

8. கலைத்திட்டத்தில் இருக்கும் காலத்திற்கு ஒவ்வாத பழைய கருத்துக்களை நீக்க கலைத்திட்ட மேம்பாடு தேவைப்படுகிறது. பயன்அளிக்காத ஒன்றை செய்வது முட்டாள்த்தனமாகும். இந்த வகையில் கலைத்திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவாத கருத்துக்களை நீக்குதல் வேண்டும்.

9. கற்போரின் சுதந்திரமான சிந்தனைக்கும், அவர்களது தன்னம்பிக்கைக்கும் கலைத்திட்ட மேம்பாடு அவசியமாகின்றது.

10. கல்வியில் கற்போரின் கற்றல் விளைவுகளை அடித்தளமாக அமைக்க கலைத்திட்ட மேம்பாடு அவசியமாகின்றது.

11. தனிமனிதனின் தேவைகளை உள்ளடக்க கலைத்திட்ட மேம்பாடு அவசியமாகின்றது.

12. கல்வியியலாளர்கள், கற்போர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கிடைக்கும் பின்னூட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு கலைத்திட்ட வடிவமைப்பாளர்கள் அதனை மேம்படுத்துவது அவசியமாகின்றது.

13. நடைமுறையிலுள்ள கலைத்திட்டத்தினை மதிப்பீடு செய்து மாற்றியமைக்க கலைத்திட்ட மேம்பாடு அவசியமாகின்றது.


மேற்குறிப்பிட்டவாறு கலைத்திட்ட மேம்பாட்டின் தேவைகளைப் பொதுவாகக் குறிப்பிடலாம். இத்தகைய தேவைகளில் இன்றைய தேவையை முக்கியப்படுத்தி கீழே விரிவாக நோக்குவோம்.


கல்விக்கான இலக்குகள் காலத்திற்கு காலம் தொடர்ச்சியாக மாறுபடுகிறது. அதாவது ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆட்சிக்குத் தேவைப்பட்ட நடுநிலை, கீழ்நிலை ஊழியர்களைத் தயாரிப்பதும் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மேன்மையை பறைசாற்றுவதுமாகவே அவர்களின் காலத்தில் கல்விக்கான இலக்குகள் காணப்பட்டன. பின்னர் படிப்படியாக ஆட்சிமாற்றங்களும் அரசியல் மாற்றங்களும் இடம்பெற்றதற்கு இனங்க கல்விக்கான இலக்குகள் மாற்றமடைந்தன. தற்போது திறனாய்வு, மனப்பாங்கு, சுய முகாமைத்துவம், விழுமியப்பண்புகளுடனான முகாமைத்துவ செயற்பாடுகள், நவீன தொழில்நுட்ப கல்வி முதலிய விடயங்களை முக்கியமான தொனிப்பொருளாகக் கொண்டதாக கல்விக்கான இலக்குகள் விளங்குகின்றன. இதற்கமைய கலைத்திட்ட மேம்பாடு அமைதல் வேண்டும்.


சமுகத்தின் தேவைகள் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றது. அந்தவகையில், பொருளாதாரம், அரசியல், தொடர்பாடல், வைத்தியம் மற்றும் கல்வி என பல வகையினதாக சமுகத்தின் தேவைகள் காணப்படுகின்றது. இத்தககைய தேவைகளுக்கு ஏற்றவாறு கலைத்திட்ட மேம்பாடு காணப்பட வேண்டும். தற்போது தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது சமூகத்தோடு பின்னிப்பிணைந்ததாக உள்ளது. இத்தகைய நவீனத்துவமானது சமூகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் கலந்துள்ளது இதற்கமைய கலைத்திட்ட மேம்பாடானது காணப்பட வேண்டும்.


தற்போதுள்ள மிக முக்கியமான விடயமாக குழந்தை மையக் கலைத்திட்டம் உள்ளது. மாணவர் மையக் கலைத்திட்டத்தில் ஒரு வடிவமைப்பாக குழந்தை மையக் கலைத்திட்டத்தினைக் குறிப்பிட முடியும். அந்தவகையில் குழந்தை மையக் கலைத்திட்டம் என்பது குழந்தைகள் தமது ஆர்வங்கள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப இயற்கை சூழலில் பல்வேறு செயல்களில் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கின்ற கலைத்திட்டமாகும். அதாவது குழந்தை மையக் கலைத்திட்டத்தில் குழந்தைகள் தங்களது உடலையும் அனைத்துவித உணர்வுகளையும் பயன்படுத்தி மனதாலும் உடல்ரீதியாகவும் சுறுசுறுப்பாக அவர்கள் உலகத்தை ஆராய்ந்து கற்றுக் கொள்கிறார்கள். மேலும் குழந்தைகளின் உள்ளார்ந்த தேவைகள் மற்றும் ஆர்வங்களை மையப்படுத்தியதாக கற்றல் இடம் பெறுவதை குழந்தை மையக் கலைத்திட்டம் வலியுறுத்துகிறது.


குழந்தையின் மனப்பாங்குக்கு ஏற்றவாறும் கற்பிப்பவரின் திறன்களையும் வளர்ப்பது குழந்தை மைய கற்றலின் நோக்கமாகும். அதாவது குழந்தையானது தானாகவே கருத்துக்களை அல்லது திறன்களை தன் திறனுக்கும், கற்றல் வேகத்திற்கும் ஏற்ப கற்று முன்னேற்றுவதற்கும் மற்றும் கற்பித்தலை விடகற்றலுக்கு முக்கியத்துவம் அளித்து ஆசிரியர் ஒரு வழிகாட்டியாகவும் வாய்ப்புகளை அளிப்பவராகவும் மற்றும் மேற்பார்வையாளராகவும் விளங்குவதே குழந்தைமையக் கலைத்திட்டத்தின் அடிப்படையாகும். ஜனநாயக சிந்தனை ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்த தனிநபராகக் கருதுவதால் கல்வித்திட்டங்கள் யாவும் ஒவ்வொரு குழந்தையும் தனிக்கவனமும் உரிய வாய்ப்புகளும் பெற்று தனது தனித்திறன்களையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்படுவதே குழந்தைமையக் சுல்வியாகும். இத்தகயை குழந்தைமையக் கலைத்திட்டத்திற்கு அமைய கலைத்திட்ட மேம்பாடு மேற்கொள்ளப்படல் வேண்டும்.


தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல்,பண்பாடு ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கு இடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டு வரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழுகின்ற நிலையையும் உலகமயமாக்கல் (Globalization) எனலாம். மேலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று வாழ்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல், நாடுகளுக்கிடையிலான வணிக கட்டுப்பாடுகள் இழிவாக்கப்படுதல், உள்நாட்டு உள்ளுர் சந்தை வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்து வைக்கப்படல், நாடுகளுக்கிடையிலான தொலைத்தொடர்புகள் விரிவாக்கப்படல், மக்கள் கலாசாரம் ஒன்றிணைக்கப்படல் என்பவற்றையும் இத்தகைய உலகமயமாக்கலானது மேற்கொண்டுள்ளது. இத்தகைய உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள பல்வேறு தேவைகள் காரணமாக கல்வியும் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக கலைத்திட்ட மேம்பாடு அமைய வேண்டும்.


கலைத்திட்டத்தில் இருக்கும் காலத்திற்கு ஒவ்வாத பழைய கருத்துக்களை நீக்கி கலைத்திட்ட மேம்பாடு தேவைப்படுகிறது. பயன்அளிக்காத ஒன்றை செய்வது முட்டாள்தனமாகும். இந்த வகையில் கலைத்திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவாத கருத்துக்களை நீக்குதல் வேண்டும். இத்தகைய பழைய கருத்துக்களை நீக்கி பின்வரும் அம்சங்களைக் கொண்டதாக கலைத்திட்டம் காணப்பட வேண்டும்.

• தேர்விற்கு மட்டுமே மாணவர்களை தயாரித்தல் என்ற நிலை மாற வேண்டும்.

• மாணவர்கள் பண்முக திறன் வளர்க்கும் நிலையில் கலைத்திட்டம் அமைய வேண்டும்.

• கரும்பலகை கற்பித்தல் நிலைமாறி மின்னனு தொழிற் நுட்பம் கருவிகள் கொண்டு வகுப்பறை கற்பித்தல் என்ற நிலை வர வேண்டும்.

• செயல் முறை கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தற்போது சடங்காக நடைபெறும் செயல் முறை தேர்வு உண்மையான திறனறி தேர்வாக வேண்டும.;

• தேர்வர் அனைவரும் முழு மதிப்பெண் பெறுதல் என்ற நிலை மாறி உண்மையான திறனறி தேர்வாக மாற்ற வேண்டும்.

• ஆசிரிய பயிற்சி கல்வியில் சீரிய மாற்றம் கொன்றுவரப்பட வேண்டும்

• பணிமுன் பயிற்சி பணியிடைப்பயிற்சி மாற்றங்கள் தேவை

• கல்வி தான் சமூக மாற்றத்திற்கான கருவி என்பதால் ஆசிரியர்கள் கல்வி தரம் மேம்படுத்த வேண்டும்

• மதிப்பு சார் பண்புகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்

• கலைக் கல்வி, உடல் நலக் கல்வி என்பன திறன்பட பயிற்சி அளிக்கப்பட வேண்டும்

• தொழிழற் கல்வி பொதுப்பாடத்தில் ஒரு பகுதியாகவே கற்பிக்க வேண்டும்

• தேர்வு முறையில் வினாத்தாள் வடிவமைப்பில் சீர் திருத்த வேண்டும்

• சுய மதிப்பீட்டு சோதனைகள் மூலம் ஆசிரியர்கள் திறனறிய வேண்டும்

• ஆசிரியர்கள் தொடர் கல்வி மேம்பாட்டிற்கு, கற்பித்தல் முறைகள் ஆய்விற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்

• ஒருவிளக்கு மற்றோரு விளக்கையேற்ற தொடர்ந்து எரிய வேண்டும் அதுபோன்று ஆசிரியர் தொடர்ந்து கற்பவராக இருக்க வேண்டும்.

• நவீன தொழிநுட்பம் கையாளபவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும்

• கற்பித்தல் உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்


வேளாண்மைப் பொருளாதாரம், பயிர்த்தொழில் உற்பத்தி குறித்த அறிவாக அமைந்தது. அதன் வளர்ச்சி வணிகப் பொருளாதாரத்தை உருவாக்கியது. வேளாண்மை விளைபொருள்களின் உற்பத்தியும் வணிகமுமே பொருளாதாரத்தின் நிலைகளாக நீண்டகாலம் அமைந்தன. பொருளாதாரம் நாளடைவில் விளைபொருட்களோடு, எரிபொருள்களான நிலக்கரி, எரி எண்ணெய், உலோகம் (இரும்பு, தங்கம், செம்பு) என்னும் கனிம வளப் பொருளாதார அடிப்படைகளில் விரிந்தது. பின்னர் போக்குவரத்தும், தொலைத்தொடர்பும் வளர்ந்தபின், விளை பொருட்கள், கனிமப்பொருட்கள் என்பவற்றோடு உயர்கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் இணைந்து அறிவுப் பொருளாதாரம் வழியாக உலகம் ஒரு குடும்பமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. 


அனைத்துப் பொருளாதார நடைமுறைகளிலும் கல்வியறிவின் தாக்கம் இன்றியமையாததோர் முக்கித்துவத்தைப் பெற்றுவருகிறது. அறிவையே மூலதனமாகக் கொண்டு ஆற்றப்படும் பொருள்செய், நிதிசெய் வாணிப முயற்சிகளைப் படிப்பதே அறிவுப் பொருளாதாரம் (Knowledge Economy) எனப்படுகிறது. பொருளாதாரத்துக்குப் பொருளும் பணமும் அடிப்படையாவதற்கு மேலாகவும் அறிவு அடிப்படையாகிறது என்பதே அறிவுப் பொருளாதாரம் ஆகும். இதன் தேவைக்கு அமைய கலைத்திட்ட மேம்பாடு அமைவது அவசியமாகும்.


காலச் சுழற்சி, நவீன தொழில்நுட்பவியலின் வேகமான பரவல், புதிய உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோவொன்றுக்காக பலவற்றை இழந்தும், காலத்தின் பறிப்பும், வழங்கலுமாக வாழ்வுக்கான போராட்டமாக மனிதம் சுழன்று கொண்டுள்ளது. இதில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்பது மனித வாழ்வியலுக்குள் முக்கியத்துவம் பெற்றுவருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. உலகில் எங்கு என்ன நிகழ்ந்தாலும் அதனை உடனேயே கைக்குள்ளே கொண்டுவரக்கூடிய வகையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை வளர்ந்துள்ளது.


கல்வித்துறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் தாக்கம் பற்பல கற்பித்தல் முறைகளையும், தகவல் வளங்களையும் தொழில்நுட்பம் மற்றும் அறிவு நுணுக்கத் திட்டமிடல்களையும் உள்வாங்கி தனியே ஒருவர் என்றில்லாமல், மாணவர், ஆசிரியர், பெற்றோர், குடும்பம், சமூகம், நாடு, சர்வதேசம் என பரந்து விரிந்து காணப்பட்டு இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் வலைப்பின்னலினூடாக எம்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில், கற்போருக்கு பயனுள்ள தகவல்களையும் திறன் களையும் கற்பிப்பது மட்டும் நமது ஒரே நோக்கமாக இருக்க முடியாது. அவர்களை பயனுறுதியுள்ள கற்போராக மாற்றுவதும் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதாவது அவர்கள் தன்னிச்சையான கற்போராக மாற வேண்டும். தமக்குத் தேவையானவற்றை தாமே தேடிப்பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கற்றல்-கற்பித்தல் வழிமுறைகள் அமைந்திருக்க வேண்டும். உதாரணமாக இணையத்தின் ஊடாக குறிப்புகளைப் பெறல், கற்பிக்கின்ற காட்சிகளைப் பார்வையிடல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறான வழிமுறைகளைக் கொண்டதாக கலைத்திட்ட மேம்பாடு இடம்பெறல் வேண்டும்.


கடந்த 3 வருடங்களாக கொரோனா எனும் தொற்று நோய் உலகை ஆட்டம் காணவைத்துள்ளது. இதற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட போதும் இது முற்றாக குறைந்ததாக இல்லை. இக்காலப்பகுதியில் மாணவர்கள் கற்றலை தொடர முடியாத நிலை உருவாகியது. இத்தகைய அசாதாரண நிலைகளினால் மாணவர்கள் இணைய வழி மூலமாக வீடுகளில் இருந்தே கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய வசதிகளை சமூகவலைத்தளங்கள் உருவாக்கி உள்ளன. உதாரணமாக (Zoom, Google Classrooms) போன்ற செயலிகள் மூலமாக இணையவழி மூலம் விரும்பிய ஆசிரியர்களிடம் கல்வி கற்க கூடிய வசதியானது இன்று காணப்படுவது மாணவர்களின் கற்றலுக்கு உதவியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாடசாலைகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இணைய வழி மூலமாக இடம்பெறுகின்றன. இந்தவகையில் இணையவழிக் கல்வியை உள்ளடக்கும் வகையிலானதாக கலைத்திட்ட மேம்பாடு அமைய வேண்டியது அவசியமான தேவையாக உள்ளது.

  

எனவே மேற்குறிப்பிட்டவை இன்றைய முக்கிய தேவைகளாகும். இத்தகயை தேவைகளுக்கு அமைய கலைத்திட்ட மேம்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வியே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைவதனால் அச்சமூகம் மாறுவதற்கு ஏற்றவாறு கல்வியிலும் மாற்றங்கள் இடம்பெறல் வேண்டும். அதற்கு இசைந்து கொடுக்கக் கூடியவாறு கலைத்திட்டமும் கலைத்திட்ட வடிவமைப்பாளர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனலாம். மேலும் எந்த மாற்றமும் முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமேயொழிய, பெயரளவு மாற்றமாக இருப்பதால் எவ்வித பயனுமில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.




Comments

Popular posts from this blog

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Case Study Analysis Of MAS Holdings