ஆரம்ப பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகளும் நோக்கங்களும்.

சமூக, பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பாடசாலையில் ஆலோசனை வழங்கல் சேவையினை அவசியமாக்கியுள்ளன. அந்தவகையில் படிப்படியாக பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையானது விருத்தியாக்கப்பட்டு வருகிறது. இச்சேவை ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான  ஆலோசனை வழங்கல் சேவை, இடைநிலை மாணவர்களுக்கான ஆலோசனை வழங்கல் சேவை என இரண்டு விதமாக வழங்கப்படுகிறது. அவற்றில் ஆரம்ப பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகளையும் நோக்கங்களையும் கீழே விரிவாக நோக்குவோம்.



ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை சேவையானது வழங்கப்படுவதற்கான நோக்கங்களாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.


  • குடும்பத்திலிருந்து போதிய கவனிப்பு கிடைக்காமையால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை கல்வியில் கவனம் செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

  • கற்றல் குறைபாடுடைய பிள்ளைகளை சரியாக இனங்கண்டு அதற்குரிய மாற்றீடுகளை செய்து கல்வியில் சிறந்த முறையில்  திகழச்செய்தல்.


இத்தகைய நோக்கங்களை சற்று விரிவாக நோக்குவோம்.


ஆரம்ப பாடசாலையில் மாணவர்கள் கல்வியினை சிறந்த முறையில் விளங்கிக் கொண்டால் அதற்கடுத்ததாக  தொடரும் இடைநிலைக் கல்வியை சிறப்பாக தொடரலாம். ஆரம்ப பாடசாலை மாணவர்கள் எனும் போது அவர்கள்  தரம் 1 -5 வரை கற்கும் பிள்ளைகளாகும். இத்தகைய மாணவர்கள் கல்வியை முழுமையாக தொடர்வதற்கு உடல், உள ரீதியாக பிரச்சினைகள் அற்றவர்களாக காணப்படல் வேண்டும். இதற்காக ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கல் சேவை சிறந்த முறையில் வழங்குதல் வேண்டும். ஆய்வுகளின்படி (விக்ரமரட்ன 2002) ஆரம்ப பாடசாலை பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கல் சேவையினை வழங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைக்கு பிரதான காரணம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு குடும்பத்திலிருந்து போதியளவு கவனிப்பு கிடைக்காமையாகும். இத்தகைய கவனிப்பு கிடைக்காமைக்கான காரணங்களாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • தாய் அல்லது தகப்பன் அல்லது இருவரும் வெளிநாடு சென்றிருத்தல்.

  •  தகப்பன் அல்லது தாய் பிள்ளையை கைவிடுதல்.

  •  குடும்பத்தில் தாய் தகப்பனுக்கு இடையே முரண்பாடு காணப்படுதல். 


இத்தகைய காரணங்களால் மாணவர்களின் மனமானது பெரும் பாதிப்புக்குள்ளாகும். இவர்கள் தாய் தந்தையினால் கைவிடப்பட்டுச் சென்றதும் ஏனைய உறவினர்களிடமே வளர்வர். அத்தகைய உறவினர்களால் பல உடல் உள ரீதியான பாதிப்புக்குள்ளாவர். இவர்களுக்கு உரிய முறையில் கவனிப்பை வழங்கி அவர்களை கல்வியில் நன்றாகச் ஈடுபடச்செய்தல் வேண்டும்.


ஆரம்ப பாடசாலையிலேயே மாணவர்களின் கற்றலில் உள்ள குறைபாடுகளை நீக்குதல் வேண்டும். இல்லாவிட்டால் அதனைத் தொடர்ந்து கற்பதில் சிரமம் ஏற்படும். இதனைத் தவிர்க்கும் வகையிலே ஆரம்ப பாடசாலையிலே மாணவர்களுக்கு ஏற்படும் வாசித்தலில் சிரமம், எழுதுவதில் ஒழுங்கின்மை, கணித எண்ணக்கருக்களை சரியாக விளங்கிக் கொள்ளாமை, போன்ற பிரச்சினைகளை இனங்கண்டு பொருத்தமான குறை நீக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆசிரியர்களின் கடமையாகும். இவ்வாறு ஆரம்பத்திலேயே கற்றல் பிரச்சினைகளை தீர்த்தல் வேண்டும். இல்லாவிடின் பிற்காலத்தில், அம்மாணவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் நிலை தோன்றும்.



 மாணவர்கள் வீட்டுச்சூழலை அடுத்து அதிக நேரம் இருப்பது பாடசாலையாகும். பாடசாலையிலே ஆசிரியர்கள், மாணவர்களின் உடலியல் ரீதியாக தடங்களின் காரணமாக ஏற்படக்கூடிய  குறைபாடுகளை இனங்கண்டு அக்குறைபாடுகள் வளர்ச்சியடைவதற்கு முன் அதற்கான குறை நீக்கு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அப்பிள்ளையின் பெற்றோருடன் இணைந்து செயற்படல் வேண்டும்.உதாரணமாக பார்வைக்குறைபாடுள்ள பிள்ளைகள், கேட்டல் குறைபாடுள்ள பிள்ளைகள் போன்றோரை ஆசிரியர் இனங்கண்டு அதனை பெற்றோரிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தலைக் குறிப்பிடலாம். 


பொதுவான அறிவுசார் திறமை, குறிப்பிட்ட கற்றலுக்கான உளச்சார்பு, ஆக்கபூர்வமான மற்றும் விளைவு தரும் சிந்தனை, தலைமைத்துவ திறன், கட்புல மற்றும் அரங்கக் கலைகள், உடல் இயக்க திறன்   இவற்றில் ஒன்றில் அல்லது பலவற்றில் உயர் சாதனைகளை வெளிக்காட்டுகின்றமையே மீத்திறனாகும். இவ்வாறான மீத்திறன் கொண்ட பிள்ளைகளை இனங்கண்டு அவர்களுக்குரிய விசேட கல்வியினை வழங்குவது ஆலோசனை வழிகாட்டல் சேவையின் நோக்கமாகவுள்ளது. இவ்வாறு மீத்திறன் கொண்டவர்களுக்கு விசேட கல்வி வழங்குவதற்கு கீழ்வரும் இரண்டு நோக்கங்கள் கூறப்படுகின்றன.அந்தவகையில், 

  • ஒரு திறனை அல்லது பல திறன்களை விருத்தி செய்வதன் மூலமும் அவற்றை வெளிக்காட்டுவதன் மூலமும் அதியுயர் அறிவுசார் வளர்ச்சிக்கும் சுய நிறைவேற்றுகைக்கும் இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்குதல்.

  • நாட்டின் அறிவை  நுகர்வோராக அல்லாது அறிவை விருத்தி செய்வோராக அமைந்து நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க உதவி செய்யக்கூடிய மக்கள் களஞ்சியத்தை சமுதாயத்தில் அதிகரித்தல். 


அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சில மீத்தறனுடைய பிள்ளைகளில் கற்பதற்கான ஆர்வம் அதிகமாகவுள்ளமையால் அவர்களால் எதுவித உதவியும் இன்றி வாழவும் வளரவும் முடிகிறது. ஆனால் வேறு சில மீத்திறனுள்ள பிள்ளைகளில் இத்தகைய மீத்திறன் இனங்காணப்படாது விடப்படும் போது அவர்களில் பாதுகாப்பின்மை, பதகளிப்பு என்பன உருவாகுவதுடன் அப்பிள்ளைகள்  மீத்திறனுடைய அறிவு குறைந்தாராக அல்லது பாடசாலையை விட்டு இடைவிலகுவோராக காணப்படுகின்றனர்.          . இதற்கமைய மீத்தறனுடைய பிள்ளைகள் ஆரம்பப்பாடசாலையிலே ஆசிரியர்களால் இனங்காணப்படுவதையும் நோக்காக்க் கொண்டதாக ஆரம்ப பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் வழங்கல் சேவை உள்ளது.


ஆரம்பப் பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையினை இரண்டு விதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

  • பிள்ளைகள் விருத்தியில் சாதமாக செயற்படுவதற்கு அம்மாணவர்களின் பெற்றோருடன் ஆலோசகர் தொடர்பு மேற்கொண்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கல் சேவையினை வழங்குதல்.

  • ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு நேரடியாக ஆலோசனை சேவையினை வழங்குதல்.

பெற்றோருடன் ஆலோசகர் தொடர்பை மேற்கொண்டு  கீழ்வரும் விடயங்களை ஊக்குவிக்க வேண்டும்.

  • தாய்க்கும் தகப்பனுக்கும் இடையிலான சுமுகமான உறவானது பிள்ளையின் உள ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்துவதால் அத்தகைய உறவை சிறந்த முறையில் பேணுதல்.

  •  பிள்ளைகளுக்கு சம போசாக்குள்ள உணவினை வழங்குதல்

  •  பிள்ளைகளை பாடசாலைக்கு ஒழுங்காக அனுப்புவதன் மூலம் பாடசாலைகளிலும் விருத்தியிலும் ஏற்படும் பொருத்தமற்ற தாக்கங்களை குறைத்துக் கொள்ள முடிகின்றது. இதனால் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு ஊக்குவித்தல்.

  •  பாடசாலைக்குப் பின் அவர்கள் அதிக நேரத்தைக்  கழிப்பது  வீட்ெலாகும் அங்கு எவ்வாறு நேரத்தைக் கழிப்பது  என்பது குறித்து திட்டமிடுவதற்கு பிள்ளையின் பாடசாலை நாட்களில் ஆரம்ப காலத்திலேயே உதவ வேண்டியுள்ளது  அதற்கான ஏற்பாடுகளை செய்தல்.


மாணவர்களை நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்கப்பட வேண்டிய விடயங்களாக கீழ்வருவனவற்றைக் குற்ப்பிடலாம்.


  • கற்றல் இடர்பாடுகள் கற்றல் குறைபாடுகள்

  • சாதாரண உளவியல் ரீதியான குறைகள்

  •  தொழிற்பாட்டு நடத்தை. அழித்தல சார்ந்த நடத்தை.சமூகத்திலிருந்து பின்வாங்கல் போன்ற சாதகமற்ற நடத்தைகள்

  •  கற்றலில் பாதகமான தாக்கத்தை உண்டு பண்ணும் பொருளாதார கஷ்டங்கள்

  •  பாடசாலையில் வகுப்பில் பொருத்தப்பாடு அடைவதில் எதிர் நோக்கும் பிரச்சினைகள்

  •  பார்த்தல், கேட்டல், குறைபாடுகளை உடைய பிள்ளைகள் அனுபவிக்கும் பிரச்சினைகள்


எனவே மேற்குறிப்பிட்டவாறு ஆரம்ப பாடசாலையின் தன்மைகளையும் நோக்கங்களையும் விளங்கிக் கொள்ளலாம். இவை சிறப்பாக இடம்பெறுவதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் இருவரும் தங்களது பங்களிப்புக்களை வழங்குதல் வேண்டும். ஏன்எனில் ஆரம்ப பாடசாலையில் உள்ள மாணவர்கள் வயது குறைந்தவர்களாவர். சிந்தித்து செயற்படும் தன்மை படிப்படியாக வளர்ந்துவரும் நிலையில் உள்ளவர்கள் அவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனை வழங்கி அவர்களை கற்றலில் உடல் உள ஆரோக்கியத்துடன் ஈடுபடச்செய்தல் வேண்டும். இங்கு தவறு விடப்படுமாயின் அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


- RASIMA .BF (BA - R)

EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Case Study Analysis Of MAS Holdings

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.