சிறந்த ஆலோசகர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்

ஆலோசனை நாடிகளின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு மதிப்பிட்டு பொருத்தமான  பதில் மொழிகளை அளிப்பவராகவுள்வறே  ஆலோசகர் ஆவார். இவரது பணி, “ஆலோசனை நாடிகள், இவர்களை சந்திக்க வருகின்ற போது குழப்பமாக சுயமதிப்பீடு குறைந்து தங்களது ஆற்றல்களை புரியாமலேயே வருகின்றனர். இத்தகைய பிரச்சினை பற்றிய தெளிவையும் தீர்வுகள் பற்றிய அறிவும் இல்லாதவர்களாகவே வருகின்றனர். இவர்களுக்கான தீர்வுகளை எடுக்கக்கூடிய ஆற்றல்களை ஆலோசனை நாடியிடம் ஏற்படுத்துவதே ஆகும்”. இத்தகைய சேவையை வழங்கும் ஆலோசகர்கள் சிறந்த பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அவற்றைக் கீழே விரிவாக நோக்கலாம்.


ஆலோசனை வழங்கும் நபர் உண்மையில் முன்மாதிரியான தன்மைகளை கொண்டிருத்தல் வேண்டும். அறிவில் தெளிவு மிக்கவராகவும், சக்தி உடையவராகவும், நெகிழ்வானவராகவும் உதவி அளிப்பவராகவும் இருத்தல் வேண்டும். மனித உறவுகளை உறுதி செய்பவை மனநிலையாகும். நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை ஒருவரிடம் கொண்டுள்ள உறவின் தன்மையையே நிர்ணயிக்கின்றன. ஆலோசனையில் ஈடுபடும்போது உதவி பெறுபவர் குறித்து கொண்டுள்ள எண்ணங்கள் வழிகாட்டலில் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஆலோசனை வழிகாட்டல் துறையில் புலமை பெற்றவராகவும் பிறரை கவர்ந்திழுப்பபவராகவும் பிறரது நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்க வேண்டும்.


பயன்பெறுனர் இலகுவாக பேசுவதற்கு வழி செய்தல். அதாவது ஆலோசனை நாடியே பேச்சை தொடங்க வேண்டும் என்று கருதாது, ஆலோசகர் தன்னைப் பற்றிய அறிமுகத்தை வழங்கி அவருடைய விபரத்தைக் கேட்டு அவரைப் பேசுவதற்கு வழி செய்தல் வேண்டும். மேலும் ஆலோசனை பற்றிய அறிமுகத்தை ஆலோசனை நாடியிடம் கூறுதல் வேண்டும்.


இரகசியம் பேணுபவராக ஆலோசகர் காணப்படல் வேண்டும். ஆலோசனை நாடி பல்வேறு வகையான பிரச்சினைகளை மனதில் வைத்திருப்பார். அவருக்கு தனது பிரச்சினைகளை கூறுவதற்கு நம்பிக்கையான ஒருவர் இல்லாத காரணத்தால் பிரச்சினைகளை மனதிலே வைத்து சிரமப்படுவார். இவருக்கு தன் மீது நம்பிக்கை ஏற்படுத்த அவருடைய விடயங்களை அதாவது இரகசியங்களை வெளியிடாதவறாக ஆலோசகர் காணப்படல் வேண்டும். இது ஆலோசகர் தொழிலின் தொழில் தர்மம் ஆகும். இவர் ஆலோசனை நாடியின் இரகசியங்களை வெளியிடும் போது அவரது ஆலோசகர் என்ற தொழிலே இல்லாமல் ஆகும் நிலை ஏற்படும்.


தனிப்பட்ட இலாபம் தரும் சிகிச்சை பெறாதிருத்தல். இலவசமாக நடத்தப்படுகின்ற ஆலோசனை சேவைகள் எவையும் எந்தவிதமான கட்டணமோ கொடுப்பனவோ நன்கொடையோ பெறுவதில்லை. அவ் ஆலோசகர்கள் எந்தவிதமான அன்பளிப்பையோ பணத்தையோ சேவை கட்டணத்தையோ ஏற்றுக்கொள்வதில்லை. தனியார்துறை ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை அறவிடுவதை தவிர அதற்குப் புறம்பான கொடுப்பனவுகள் அன்பளிப்புகள், சலுகைகள் எதனையும் பெற்றுக் கொள்வதில்லை. இவ்வாறான பண்பு ஆலோசகரிடம் காணப்பட வேண்டும். பணத்திற்காகவே ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன் இருத்தல் கூடாது. 


ஆலோசனை நாடியின் பிரச்சினையின் பின்புலத்தை நன்றாக அறிந்து கொள்வதற்கு ஆலோசனை நாடியிடம் முழுமையான விளக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அரைகுறையாக பிரச்சினையின் பின்புலத்தை விளங்கி பொருத்தமற்ற ஆலோசனைகளை ஆலோசகர் வழங்கக்கூடாது. இதற்காக ஆலோசனை நாடியின் வாயினாலேயே பிரச்சினைக்கான முழு விளக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஆலோசனை நாடிக்கு தைரியமளித்தல். அதாவது நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க கூடியவர், தற்போது ஆலோசனைக்காக ஒருவரை நாடி வந்துள்ளமையே தைரியமான விடயமாகும் என்று கூறி ஆலோசனை நாடியினை தைரியமானவராக உணரச் செய்தல் வேண்டும். இதன்போதே அவர் தன்னை தாழ்வாக எண்ணிக் கொள்வதை நிறுத்திக் கொள்வார்.


கேள்விகளை பாவித்து ஆலோசனை நாடியின் பிரச்சினைகளை வெளிக்கொணரல். அதாவது நீங்கள் இந்தப் பிரச்சனையோடு இருக்கிறீர்கள், இந்த மாதிரியான தீர்வுகளை எதிர்பார்க்கிறீர்கள், என்று கேட்டு அவர்களின் பிரச்சனை தொடர்பாக அவர்களது  எண்ணங்களை பெற்றுக்கொள்ளல்.


ஆலோசனை நாடியின் பிரச்சினைகளையும் அவர் அதனால் அனுபவிக்கும் வேதனைகளையும் ஆலோசகர் ஏற்றுக்கொள்ளல். அவ்வாறே ஆலோசனை நாடிக்கு பிரதிபலிப்புக்கு தூண்டுதல், உணர்வுகளை இனங்காண்பதற்கு தூண்டுதல், உணர்வுகளை இயல்பாக்குதல், மறைந்த உணர்வுகளை வெளிக் கொணர்தல் ஆகியவற்றை ஆலோசனை நாடியிடம், ஆலோசகர் மேற்கொள்ளல் வேண்டும்.


ஆலோசகர் ஆலோசனை நாடியுடன் மிகவும் நெருக்கமாக  நடந்து கொள்ளல். உதாரணமாக, பிரச்சினையை தீர்ப்பதற்குறிய திட்டத்தை இருவரும் இணைந்து மேற்கொள்ளல், மாற்று வழிகளை இனங்காணல், தடைகளுக்கு முகங்கோடுப்பதற்கு  ஆலோசனை நாடியை தயார்படுத்தல் ஆகியவற்றை குறிப்பிடலாம்.


ஆலோசகர் நட்புறவு கொள்கின்ற போதிலும் ஆலோசனை சேவை முடிவடைந்ததன் பின்னர் சேவை பெறுபவர்களை தனிப்பட்ட அல்லது குடும்ப நண்பர்களாக ஆக்கிக் கொள்வது கூடாது. ஆலோசனை சேவை முடிவடைந்ததும் தொடர்புகளும் நிறுத்தப்படும். அதாவது தனிப்பட்ட எந்த வித தொடர்பும் கொள்ளாது இருத்தல் வேண்டும்.


ஆலோசகர், சேவை நாடிகளின் உணர்வுகளை சரியாக மதிப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டால் அவரது பிரச்சினைகளை சிறந்த ஆலோசனைகளை வழங்கலாம் இவ்வாறு செயற்படும் போதே குறித்த ஆலோசனை சேவை வெற்றிகரமாக அமையும்


பொறுமையாக நடந்து கொள்பவராக ஆலோசகர் காணப்படல் வேண்டும். அதாவது ஆலோசனை நாடி பேசும்போது நேரம் போய்விட்டதே என்று அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தல், ஆலோசனை நாடியின் அதிக நேரம் பேசுகிறார்  என்ற கசப்புணர்வு போன்றவற்றை தவிர்த்து அவர் பேசும் போது அவரை முழுமையாக பேச வைத்தல் வேண்டும். மேலும் அவரது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது அழுதாலும் அவரை அழவிடுதல் வேண்டும். இவ்வாறு ஆலோசகருக்கு பொறுமை மிகவும் அவசியமாகும்.


தேவைப்படும்போது ஆலோசகர் ஆலோசனை நாடியின் சம்மதத்தோடு அவரை ஏதேனும் ஒரு உதவி பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிறுவனத்திடம் முகப் படுத்துவார். வைத்திய பிரச்சினைகளின் போது தேவையான உடலியல் வைத்தியரிடம் அல்லது உள்ள வைத்தியரிடம் அவரை முகப்படுத்துவார். இவ்வாறு உதவி சேவையையும் அறிமுகப்படுத்தும் சேவையையும் வழங்குவதும் ஆலோசகரின் பண்பாகும்.


ஒரு நல்ல ஆலோசகர் சிறந்த அனுபவத்தை கொண்டவராக காணப்படவேண்டும். அனுபவமானது அவருடன் உரையாடிய முதல் ஆலோசனை நாடியுடன் இருந்து தற்போது உரையாடும் ஆலோசனை நாடி வரை தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, தற்போது ஆலோசனை வழங்கும்  ஆலோசனை நாடிக்கு ஆலோசனை வழங்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 


ஆலோசனை நாடிக்கு  ஆலோசகர் சிறந்த நம்பிக்கைக்குரியவராக திகழ வேண்டும்,. இதற்காக தான் முன்னர் சந்தித்த ஆலோசனை நாடி பற்றியோ அவர்களது பிரச்சினைகள் பற்றியோ குறிப்பிடாது இருத்தல் வேண்டும். தான் சிறந்த முறையில் உரையாடுவதன் ஊடாக ஆலோசனை நாடிக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தல் வேண்டும். இதன்போதே ஆலோசனை நாடி தனது பிரச்சினைகளை மனம் திறந்து முழுமையாகக் கூறுவார்.


ஆலோசனை நாடியுடன் பொருத்தமற்ற தொடர்புகள், வியாபார நடவடிக்கைகள், கடனுக்கு கொடுத்தல் அல்லது வாங்குதல் ஆகியவற்றில் ஆலோசகர் ஈடுபடக்கூடாது. ஆலோசனை நாடியின் தனிப்பட்ட பிரச்சினைகளின் பங்காளராக அல்லது சார்ந்தவராக இருக்க மாட்டார். 


ஒரு நல்ல ஆலோசகர் நடைமுறைத் தீர்வுகளை வழங்கக்கூடிய அதே வேளை மூலோபாய மற்றும் தந்திரோபாயங்களுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தல் வேண்டும். இதற்காக வலுவான தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொண்டவராக ஆலோசகர் காணப்படல் வேண்டும்.


ஆழமாக கேட்கும் திறன் கொண்டவராக  ஆலோசகர்  காணப்படல் வேண்டும். ஆலோசனை நாடி பேசும் போது குறுக்கிடாது தொடர்ந்து கேட்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை விரைவாக ஒழுங்கமைத்து சிந்தனையுடன் பதிலளிக்க வேண்டும்.


வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டு இருப்பவராக ஆலோசகர் காணப்படல் ஆலோசனை நாடிகள் தங்களது சூழலில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வர். அதாவது குடும்பம், கல்வி, பொருளாதாரம் என பிரச்சினைகள் பரந்துபட்டதாக காணப்படும். இப்பிரச்சினைகளை சூழலில் உள்ள நிலைமைகள் பற்றி ஆலோசகர் அறிந்து, கற்றறிந்து இருக்க வேண்டும். உதாரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் நெருக்கடி காரணமாக இணையவழி ஊடாக மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளனர். இவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்கு ஆலோசகர் இத்தகைய இணைய வழி கல்வி தொடர்பாக அறிந்திருத்தல் வேண்டும்.


ஆலோசகர் ஒருவர் நன்னெறி ஒழுக்க நெறிகளைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான பண்பாகும். அந்த வகையில் ஏசி ரோபர் என்பவர் பாடசாலை ஆலோசனை வழங்குபவர் என்ற நூலில் ஆலோசகரின் நன் கொள்கைகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

  •  ஆலோசகர் பாடசாலைகளுக்கு பொறுப்பாளராகவும் மாணவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருத்தல் வேண்டும். 
  • ஆலோசகர் தனக்குள்ளே தான் இதற்கு தகுதி இல்லை என கருதுகின்றாறோ அப்பொழுதிலிருந்தே ஆலோசனை வழங்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  •  எந்த ஒரு ஆலோசகரரும் ஆலோசனை கூறும் நபர்கள் மற்றும் அமைப்புகளின் செய்திகளை ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
  •  ஆலோசகர் ஆலோசனை நாடி பற்றிய தகவல்களை அவரது பெற்றோர்களின் மூலமாக அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
  •  ஏனைய பணிபுரியும் நபர்களுக்கு ஆலோசகர் தன்னிடம் ஆலோசனை பெறும் நபர்களை பற்றிய தகவல்களை தரும் பொழுது விவேகத்துடன் நல்ல செய்திகளை வழங்குதல் வேண்டும்.
  •  ஏனைய பொருத்தமான நபர்களோடு ஆலோசகர் ஆலோசனை நாடி பற்றி நல்லவிதமாக கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  • ஆலோசனை நாடி இணக்கமான நடத்தையை அடைவதற்கு உதவி புரிபவராக ஆலோசகர் இருந்தபோதும் ஆலோசனை நாடிக்கு பொறுப்பு உள்ளவராக இருத்தல் வேண்டும். 

பொதுவாக தொகுத்து நோக்கும்போது ஆலோசகர் ஒருவரானவர், “உணர்திறன், ஒழுக்கம், நடத்தை, சிந்தையில் நெகிழ்ச்சி, அறிவாற்றல், திறமை, ஏற்றுக்கொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், பணிக்காக அர்ப்பணித்தல், முழுமையான தத்துவ வாழ்க்கை, தலைமைப் பண்புகள், தேக ஆரோக்கியம், மற்றும் புறத்தோற்றம், உள்ளார்ந்த அறிவு, இணக்கமான ஆளுமை, மற்றவர்களுடன் மகிழ்ச்சியான நல்லுறவு,” போன்ற பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும் எனலாம்.


எனவே மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு பண்புகளை ஆலோசகர் கொண்டிருக்க வேண்டும். இதன்போதே அவர்கள் தங்களின் ஆலோசனை சேவையினை வெற்றிகரமானதாக மாற்றிக்கொள்ளலாம். இத்தகைய பண்புகளே ஒரு ஆலோசகரை சிறந்த ஆலோசகர் என அடையாளம் காட்டுவதாக அமைகின்றன. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


-RASIMA. BF (BA-R)

Comments

Popular posts from this blog

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Case Study Analysis Of MAS Holdings

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.