கல்வியும் தனியாள் விருத்தியும்

கல்வி என்பதற்கு வரைவிலக்கணம் கொடுப்பது மிகவும் சிக்கலான விடயமாகும். எனினும் அறிவைக் கொடுத்தல், தனியாள் விருத்தி, ஆளுமை வளர்ச்சி, அனுபவங்களை பெற்றுக்கொடுத்தல், ஒழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவது கல்வியின் சிறப்பு அம்சங்களாக உள்ளது. இதில் தனியார் விருத்தி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கல்விக்கு வரைவிலக்கணம் தந்த ஜோன் டூயி கல்வியின் தத்துவத்தை நான்கு தலைப்பின்கீழ் கல்வி என்பது வாழ்க்கையை நடத்துவதாகும்
அடக்கலாம் என்கிறார். அந்த வகையில்,

கல்வி என்பது அனுபவத்தை புதுப்பிப்பதாகும்
கல்வி என்பது விருத்தி அடைதல் ஆகும்
கல்வி என்பது சமூக நடவடிக்கையாகும்
இதன் மூலம் கல்வியானது, தனியாளின் வாழ்க்கையோடு இணைந்ததாக உள்ளது. கல்வியினால் ஏற்படும் தனியாள் விருத்தியினால் சமூகத்திற்கும் சமூக விருத்தி யினால் தனியாளிற்கும் நன்மை ஏற்படுகிறது. தனியாள் சமூகத்திலிருந்துபிரிந்து வாழ முடியாது ஏனெனில் மனிதன் சமூகப் பிராணி ஆவான். சமூகத்திற்கு ஏற்ற முறையில் தனியாள் விருத்தி எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக பாடசாலை செல்வதற்கு முன் மொழியை சமூகத்திலிருந்து கற்றுக்கொள்ளும் பிள்ளை பாடசாலை சென்றதும் தனது மொழி அறிவை விருத்தி செய்து கொள்கிறது.

தனியாள் விருத்தியை வலியுறுத்தும் வகையிலேயே கல்வி அமைய வேண்டும் என்ற வகையில் மகாத்மா காந்தியும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதாவது கல்வியானது சகல பிரிவுகளிலும் தனியாளிடம் உள்ள ஆற்றல்களை உச்ச விருத்தியில் கல்வி மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறுகிறார். இவர் கல்வி மூலம் தனியாள் நிறைவான ஆளுமையை பெற வேண்டும் என விரும்பினார். மற்றும் பேர்னால்ட் ரஸல் குறிப்பிடுகையில், தனியாள் விருத்திக்கு சந்தர்ப்பங்களை வழங்கி தடைகளை விலக்கி கலாச்சார விழுமியங்களை ஒப்படைத்து சமூகத்திற்கு பயனுள்ள தனியாளை உருவாக்கும் கல்வியை இவர் அறிமுகப்படுத்தினார்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கற்கும் திறமை காணப்படுகிறது. ஒவ்வொரு மாணவனையும் ஆளுமைக்கு ஏற்றவகையில் அவனது தேவைகளை அறிந்து ஒரு ஆசிரியர் கற்பிக்க வேண்டும் என்று கல்வி உளவியல் குறிப்பிடுகிறது. இங்கு தனியார் விருத்திக்கு முக்கியம் அளிக்கப்படுகிறது நாம் தனியாக கல்வி கற்றாலும் அதைச் செயற்படுத்தக்கூடிய தளம் சமூகமே ஆகும். எனவே கல்விச் செயற்பாடுகள் சமூகச் செயற்பாடுகளாகவே உள்ளன. மனிதனை சமூகத்திற்கான வினைத்திறனான குடிமகனாகவும் சிறந்த நட்பிரஜையாகவும் உருவாக்குவதே கல்வியின் முக்கிய நோக்கமாகும்.

தனிமனிதன் பாடசாலையிலும் வெளியிலும் முறைசார் கல்வி, முறைசாரா கல்வி, முறையற்ற கல்வி கல்வி ஆகிய முறைகளின் ஊடாக அனுபவத்தை பெறுகின்றான் இதனால் நடத்தை மாற்றம் ஏற்பட்டு கூடுதலான அறிவு உள்ளவராக தனியாள் விருத்தி அடைகின்றான். மேலும் வாழ்நாள் பூராகவும் அனுபவங்களை பெறுவதனால் தனது அறிவு, சிந்தனை, திறமை என்பவற்றை விருத்தி செய்வது புலனாகிறது. இவ்வாறு அனுபவத்தை வழங்கும் காரணிகள் பல உள்ளன. இதில் அவன் நல்லவற்றயும் கெட்டதையும் சேர்த்தே அறிந்து கொள்கின்றான் இவை அனைத்தின் மூலமாகவும் நடத்தை மாற்றம் ஏற்பட்டு தனியாள் விருத்தி ஏற்படுகிறது.

பிள்ளையானது, பார்வை மூலமோ கேட்பதன் மூலமோ செயற்படுவதன் மூலமோ சூழலிலிருந்து பல விடயங்களை உள்வாங்குகிறது. இதில் சமூகத்தில் நடக்கும் பல விடயங்களை அவதானித்து எவ்வாறு தானும் செய்யப்பட வேண்டும் என தன்னை மாற்றிக் கொள்கிறது. உதாரணமாக போதை பாவனையை தவிர்த்தல், புகைத்தலைத் தவிர்த்தல், நல்ல பழக்கங்களை பழகுதல் போன்றவற்றை குறிப்பிடலாம். இதனால் தனியார் விருத்தி ஏற்பட்டு சமூகத்திற்கு ஏற்ற மனிதனாக மாறுகின்றான். முறையில் கல்வி முறையானது வாழ்க்கை முறையோடு இணைந்தது. இதனை வாழ்க்கை முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் இக் கல்வி முறையினால் சமூகத்துக்கு பொருத்தமானவாறு தனியாள் விருத்தி ஏற்படுகிறது. இக்கல்வி முறையின் மூலம் தவறான பழக்கங்கள் பிள்ளைகளிடத்தில் ஏற்படலாம் அதனை பெற்றோர் கவனித்து தவிர்த்தல் வேண்டும்.

எமது சூழலில் தனியாளை மையப்படுத்திய வகையில் தற்கால கல்வி முறைகள் மாற்றம் அடைந்து வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. பல துறைகள் கற்கைநெறிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன அவர்கள் அறிவு, தேவை மற்றும் திறனுக்கு ஏற்ற வகையில் தமக்குரிய துறைகளைத் தேர்ந்தெடுத்து உயர் கல்வியிலும் பல்கலைக்கழக கல்வியிலும் கற்று தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்கின்றனர்.

சகல நாடுகளிலும் முன்பள்ளி பருவத்திலிருந்தே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவ்வாறே பாடசாலையிலும் தனியாள் விருத்திக்குரிய பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக இசை, நடனம், ஓவியம் விளையாட்டு, புத்தாக்க செயற்பாடுகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கண்காட்சிகள், சுற்றுலா செல்லுதல், தொழில்நுட்பம் சார்ந்த செயற்பாடுகள் போன்றவை தனிமனித ஆளுமையும் திறமையையும் வழிப்படுத்தி தனிமனித விருத்தியை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் படிப்பு, ஆய்வுகள் செயல்திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழுவேளை போன்ற செயற்பாடுகளும் பாடசாலையில் இடம்பெறுகின்றன. மேலும் கணிப்பீடு மதிப்பீடு என்பவற்றிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Philips coombs என்பவர் கல்விசார்பான மனிதனின் அடிப்படைத் தேவைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடுகிறார்.
  • தனிமனிதன் குடும்பம் சமுதாயம் தொழில் சார்பாக நேர்ப்பாங்கான மனப்பாங்கு இருத்தல்
  • எண்ணறிவு இருத்தல்
  • எழுத்தறிவு இருத்தல்
  • தொழிலுக்கு தேவையான அறிவு இருத்தல்
  • விஞ்ஞான அறிவு இருத்தல்
  • குடும்பத்தை முகாமை செய்யும் திறன்
  • சமுதாய செயற்பாடுகளில் பங்கு கொள்ளும் திறன் இருத்தல்
போன்றவற்றை குறிப்பிடுகின்றார். இவற்றை சிறப்பாக அமைப்பதன் ஊடாக தனியாள் விருத்தி ஏற்படுகிறது.
அவ்வாறே E.S.Bloom என்பவர் தனிமனித வளர்ச்சி ஏற்படுவதற்கு அறிவொளி இயக்க பரப்புகளில் விருத்தி ஏற்பட வேண்டும் இதற்கு கல்வி உதவ வேண்டும் என்கிறார். அறிவு வளர்ச்சிக்கான பயிற்சிகளை வழங்குவதாக கல்வி அமைய வேண்டும் என்பதே இவரது கருத்தாகும். இதற்காக எண்கணித செயற்பாடுகள், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவை கல்வியினூடாக வழங்கப்படுகின்றன. மேலும் ஒரு மனிதன் பூரண மனிதனாக மாறுவதற்கு உருவாக்கப்பட வேண்டிய பண்புகளாக உள்ள .வினைதிறன், ஜனநாயக ஆளுமை, ஆக்கத்திறன், பகுப்பாய்வு திறன், தொகுத்தறி திறன் போன்றவையும் கல்வியினால் வழங்கப்படுகின்றது.

பாடசாலை கல்வி முறையில் பல்வேறு விடயங்கள் தனியார் விருத்திக்காக மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக சிரேஷ்ட இடைநிலை வகுப்புகளுக்கு முதற்படியாக "பிரயோகமும் தொழில்நுட்பத்தின்" ஊடாக "முயற்சியாண்மை" எனும் விடயம் கற்பிக்கப்பட்டது. பின்னர் உயர்தர வணிகத்துறையில் முயற்சியாண்மை தொடர்பாக விரிவான விளக்கத்துடன் கற்பிக்கப்படுகிறது. மேலும் பல்கலைக்கழகங்களிலும் இது தொடர்பான விளக்கத்தினை பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முயற்சியாண்மை பற்றிய கற்கையின் ஊடாக குறிப்பிட்ட மாணவனது அறிவு, திறன், மனப்பாங்கு என்பன விருத்தி அடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்வியானது தனியாள் விருதிற்கு பல்வேறு வகையில் வித்திடுகிறது. இதனாலேயே தனிமனிதனால், நவீன தொழில்நுட்ப சாதனங்களை கண்டுபிடித்தல், மருத்துவ வசதிகளை கண்டுபிடித்தல், விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடல் போன்ற போன்ற பல்வேறு சாதனைகளை செயற்படுத்த முடிகிறது. இவ்வாறு கல்வியானது தனி மனிதனது அறிவு திறனை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது எனலாம்.
எனவே மேற்கூறியவாறு கல்வியினால் தனியாளின் விருத்தி ஏற்படுகிறது இவ்வாறு ஏற்படும் தனியாள் விருத்தியினால் சமூகம் நன்மை அடைகிறது. சமூகம் முன்னேற்றமடையும் போது நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் எனலாம்.

-RASIMA,BF (BA-R) EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Case Study Analysis Of MAS Holdings

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.